கர்நாடக அரசுக்கு புதிய நெருக்கடி- பிளவை நோக்கிச் செல்லும் பாஜக- 10 அமைச்சர்கள் ராஜினாமா
சுரங்க முறைகேடு தொடர்பாக எதியூரப்பா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார் எதியூரப்பா.
இந்நிலையில் எதியூரப்பா மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களுக்கு எதிராக பாஜக மேலிடத்துக்கு முதல்வர் சதானந்தா கவுடா எழுதிய புகார் கடிதம் வெளியாகி புதிய சர்ச்சைக்கு வித்திட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த எதியூரப்பாவின் ஆதரவாளர்கள் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சதானந்தா கவுடா இதை நிராகரித்துவிட்டார்.
சதானந்தா கவுடாவின் பிடிவாதத்துக்குப் பதிலடியாக பெங்களூரில் நேற்று கூடி ஆலோசித்த எதியூரப்பா ஆதரவாளர்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது என முடிவு செய்தனர்.
எதியூரப்பா ஆதரவாளர்களான ஷோபா கரண்ட்லாஜே, பசவராஜ் பொம்மை, உமேஷ் கட்டி, சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, எம்.பி.ரேணுகாச்சார்யா, முருகேஷ் நிராணி ஆகியயோர் தங்களது ராஜினாமா கடிதத்தை எதியூரப்பாவிடம் கொடுத்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏக்களும் எதியூரப்பாவுக்கு ஆதரவாக ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சதானந்தா கவுடா தம்மை அவமானப்படுத்தியிருப்பதால் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக நேரிடும் என்றும் எதியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர்களின் ராஜினாமா குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.