21 வயதானால் மட்டுமே மது குடிக்கலாம்: கேரளாவில் புதிய சட்டம் அமல்
திருவனந்தபுரம்: கேரளாவில் 21 வயது வந்தவர்கள் மட்டுமே மதுக்கடைகளில் மது வாங்க முடியும் என்ற புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு ரேஷசன் கடைகளில் இருக்கும் வரிசையை விட ஒயின் ஷாப்புகளில் உள்ள வரிசை பெரிதாக இருக்கும். மாநிலத்தில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனை கழகம் சார்பில் மூலை முடுக்குகளில் கூட சில்லரை விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆனால் கடை திறப்பதற்கு முன்பு அதிகாலையிலேயே குடிமகன்கள் நீண்ட வரிசையில் மிகுந்த பொறுமையுடன் நிற்பதை பார்க்கலாம். ஓணம், விஷு, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை அமோகமாக இருக்கும். இந்த பண்டிகை நாட்களில் பல மணி நேரம் வரிசையில் நின்றால் தான் சரக்கு வாங்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒயின் ஷாப்புக்கோ, பார்களுக்கோ யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் சென்றனர். ஆனால் தற்போது பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் கூட தைரியமாக பார்களுக்கு சென்று மது அருந்துகின்றனர். இதை கட்டுப்படுத்த கேரள அரசு ஒயின் ஷாப் மற்றும் பார்களில் மது வாங்குவதற்கான வயது வரம்பை 18க நிர்ணயித்தது.
இந்த நிலையில் இந்த வயது வரம்பு தற்போது 21க உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் 21 வயதான குடிமகன்கள் மட்டுமே கேரளாவில் மதுக்கடையில் மது வாங்க முடியும். இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கல்வி நிறுவனங்களுக்கு 400 மீட்டர் தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்த உத்தரவும் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications