போஜ்புரியில் பேசி லோக்சபாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ப.சிதம்பரம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று லோக்சபாவில் போஜ்புரியில் பேசி அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நன்றாகத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று லோக்சபாவில் பீகார், உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் மொழியான போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுப்பது பற்றிய தீர்மானம் குறித்து ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
அப்போது அவர் என்னால் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஹம் சப்கே பாவ்னா சம்ஜத் பானி என்று போஜ்புரியில் கூறினார்.
இதைக்கேட்டதும் அவையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் அமைதியாகிவிட்டனர். பிறகு சிதம்பரத்தின் புதிய முயற்சியை பாராட்டி மேஜைகளைத் தட்டி கரகோஷம் எழுப்பினர். போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுப்பது குறித்து 2 கமிட்டிகள் சமர்பித்துள்ள அறிக்கைகளைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இத்தனை ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் சிதம்பரம் இதுவரை இந்தியில் பேசியதில்லை. அப்படி இருக்க அவர் தனது தாய்மொழியான போஜ்புரியில் பேசியதைக் கேட்ட சபாநாயகர் மீரா குமார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், சிதம்பரம் போஜ்புரியில் பேசியதில் பெருமகிழ்ச்சி. போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை விரைவில் அவர் தெரிவிப்பார் என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications