ஆர்எஸ்எஸ் தலைவரையே எனக்குத் தெரியாது என்கிறார் ஹசாரே!
நாக்பூர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவையோ, உதவியையோ நான் ஒருபோதும் பெற்றதில்ல்லை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே, ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்காக நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவை கேட்டதேயில்லை. அதன் தலைவர் மோகன் பகவத்தை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது; அவரை நான் சந்தித்ததும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் தான் இப்படி விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இனி எனது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மோகன் பகவத் அறிவிக்கக்கூடாது.
ஊழல் செய்த 14 மத்திய அமைச்சர்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பதில் கிடைத்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அரசிடம் முறையிடுவோம். எதுவும் நடக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிரசாரத்தைத் தொடங்குவோம் என்றார்.
ஹசாரேவு கார் மீது கல்வீச்சு:
இந் நிலையில் நாக்பூரில் ஹசாரேவின் பொதுக் கூட்டம் நடந்த சிட்டினிஸ் பார்க் ஸ்டேடியத்துக்கு வெளியே சில இளைஞர்கள் அன்னா ஹசாரேக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். ஹசாரே கார் அணிவகுப்பு மீதும் கல்வீசியும் தாக்கினர்.
ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு ஹசாரே அழைப்பு:
முன்னதாக சில நாட்களுக்கு ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கு கொள்ள வாருங்கள் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வி.கே.சிங் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், அவர் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்றும், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றும் ஹசாரே என்றார்.












Click it and Unblock the Notifications