டெங்கு: நெல்லை மாவட்ட சுகாதர அதிகாரியை மாற்றிய அமைச்சர் விஜய்
நெல்லை: நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியானதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரான் மைதீனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் அதிரடி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தையே உலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சுகாதாரத் துறை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக இணை இயக்குனர், கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து விஜயம் செய்தனர்.
அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஏற்பாட்டின்படி கடையநல்லூரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்துவது குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கெள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், அமைச்சர் செந்தூர்பாண்டியன், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது ரத்த வங்கி செயல்படாமல் இருப்பதையும், டெர்மட்டாலஜி இயந்திரம் இயங்காமல் இருப்பதையும் கண்டறிந்தனர். மேலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 21 பேர் பலியானதைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீனை இடமாற்றம் செய்து அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications