பிற ஆதீனங்கள் என்னை மனிதனாகக் கூட பார்க்கவில்லை: நித்யானந்தா
கும்பகோணம்: திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் தன்னை மனிதாகவே பார்க்கவில்லை என்று மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னைப் பற்றி கூறிய கருத்தை வாபஸ் பெறுவதுடன் தனது சார்பில் தூதுவரை அனுப்பி வைப்பதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார். அவரது சார்பில் சுந்தரேச அய்யர் வருவதாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து வைத்துள்ளோம். ஆனால் இதுவரை யாரும் வரவில்லை. அவர் தனது கருத்தை வாபஸ் பெறாவிடில் வழக்கு தொடரப்படும். முறையாக 7 தீட்சை பெற்ற பிறகு தான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தானாக இயற்கை எய்தும்.
திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் என்னை மனிதனாகக் கூட பார்க்கவில்லை. என்னிடம் தன்னிலை விளக்கம் கூட பெறவில்லை. என்னை நிற்க வைத்து பேசினால் கூட நான் சொல்லத் தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஆதீனங்கள் தங்கள் கருத்துகளை 10 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தேன். ஆனால் அவர்கள் எதுவும் கூறாததால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. ஆன்மிக புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்றார்.
தொடர்ந்து பேசிய மதுரை ஆதீனம் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தால் பிரச்சனை வரும் என்று தெரியும், தெரிந்தே தான் நியமித்தோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், நான் இளைய ஆதீனத்தின் பிடியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மந்திரம், மாயை, கருப்பு மையால் என்னை யாரும் வசியப்படுத்த முடியாது. எதுவும் என்னை கட்டுப்படுத்தாது என்றார்.












Click it and Unblock the Notifications