சட்டசபைக்கு தினமும் வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே..!
சென்னை: சட்டமன்றக் கூட்டத்துக்கு 81 எம்எல்ஏக்கள் மட்டுமே ஒரு நாள் கூட தவறாமல் தினமும் வந்துள்ளனர். அதாவது மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் சட்டசபைக் கூட்டத்துக்குக் கூட தினமும் வரவில்லை. திமுகவினர் 10 நாட்களே வந்தனர், மிச்ச நாட்கள் அவை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து சபாநாயகர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் 4வது கூட்டத் தொடர் 26-3-2012 முதல் 16-5-2012 வரையிலும் நடைபெற்றுள்ளது. பேரவை கூடிய மொத்த நாட்கள் 38.
முதலமைச்சர் விளக்கமளித்த நேர்வுகள் 37 முறை. உரையாற்றிய உறுப்பினர்கள் 201 பேர். உரையாற்றிய நேரம் 44 மணி 58 நிமிடம். அதில் ஆளுங்கட்சியினர் 66 பேர் பேசிய நேரம் 11 மணி 28 நிமிடங்கள். இதர கட்சியினர் 135 பேர் பேசிய நேரம் 33 மணி 30 நிமிடங்கள்.
முதலமைச்சர் தனது பொறுப்பில் உள்ள துறை சம்பந்தமாக பதிலளித்த நேரம் 1 மணி 10 நிமிடங்கள். இதர துறைகள் தொடர்பான விவாதங்களில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உடனுக்குடன் முதலமைச்சர் விளக்கம் அளித்த நேர்வுகள் 53 மணி நேரம் 44 நிமிடங்கள்.
கட்சிவாரியாகப் பார்த்தால், தேமுதிக. உறுப்பினர்களுக்கு 22.65 சதவீத நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்கள் 7.45 சதவீத நேரம் உரையாற்றியுள்ளனர். திமுக உறுப்பினர்கள் 10 நாட்கள் மட்டுமே, இவ்விவாதங்களில் பங்கு பெற்றனர். அனைத்து நாட்களும் அவர்கள் அவைக்கு வந்திருந்தால், இன்னும் 3 மடங்கு நேரம் அவர்கள் உரையாற்றியிருக்க முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 14.63 சதவீத நேரமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 10.02 சதவீத நேரமும், காங்கிரஸ் கட்சியினர் 6.45 சதவீத நேரமும், பா.ம.கவினர் 3.83 சதவீத நேரமும், மனித நேய மக்கள் கட்சியினர் 2.67 சதவீத நேரமும், புதிய தமிழகம் கட்சி 2.77 சதவீத நேரமும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 0.99 சதவீத நேரமும் உரையாற்றியுள்ளனர்.
விதி 110-ன் கீழ் அறிக்கைகள் அளிக்கப்பெற்ற 36 அறிக்கைகளையும் முதலமைச்சரே அளித்துள்ளார் என்பது சட்டமன்ற வரலாற்றில் ஒரு சாதனையாகும். 81 உறுப்பினர்கள் ஒரு நாள் தவறாமல் பங்கேற்றுள்ளனர் என்றார்.
கடைசி நாளும் திமுக உறுப்பினர்கள் வரவில்லை:
கடந்த மாதம் சட்டசபை நிகழ்ச்சியில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பிரச்சனை காரணமாக திமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதுகுறித்து பேசுவதற்கும், விளக்கம் சொல்வதற்கும் மற்ற திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.
பின்னர், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். கடைசி நாளான நேற்றும் வரவில்லை.












Click it and Unblock the Notifications