திருவிழான்னா முன்னாடியே சொல்லிட்டு செய்ங்கைய்யா: மின்வாரியம்
சென்னை: கோவில் திருவிழாக்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்குமாறு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சமீப காலமாக கோவில் தேர்த் திருவிழாக்களில் மின்கம்பிகளில் தேர் பகுதிகள் உரசி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க திருவிழா நடப்பதை முன்னதாகவே அந்தந்தப் பகுதியில் உள்ள அலுவலகம், உதவிக் கோட்டம், கோட்டம் அல்லது வட்ட அலுவலகங்களுக்குத் தெரிவித்தால், விழா நடக்கும் பகுதியில் குறுக்கே அல்லது அதன் வழியாக செல்லும் மின் பாதையில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மின் விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே கோவில் திருவிழாவின்போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அதை தூக்கிச் சென்ற 3 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவில் கூடுக்கு அருகில் சென்ற வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர். இது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து தான் மின்வாரியம் திருவிழாக்களை முன்கூட்டியே அறிவி்த்துவிட்டு நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications