என்ன படித்திருக்கிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன்?
அரசு இணையதளத்தில் அவர் கல்வித் தகுதி பி.ஏ. எனக் குறிப்பிட்டிருப்பதாகவும், ஆனால் அவர் பி.ஏ. மூன்றாம் ஆண்டு தேர்வே இன்னும் எழுதவில்லை என்றும் சொல்கின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: மதுரை ஆதீனத்தை பற்றி நீங்கள் விமர்சனம் செய்ததாக, அவர் தனது பேட்டியிலே சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவரது பேட்டியை படித்தேன். "கருணாநிதி முழுநேர அரசியல்வாதி. மூதறிஞர். அவர் என்னைப்பற்றி அவதூறாக எழுதியிருப்பது தந்தையானவர் பிள்ளையை திட்டுவதுபோலத்தான். ஆகவே கருணாநிதியின் அவதூறான எழுத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியிருப்பதைப்போல நான் அவரைப்பற்றி அவதூறாக எதையும் கூறவில்லை.
கேள்வி: தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் கல்வித்தகுதி பற்றி புதிய சர்ச்சை; ஏடுகளில் வெளியிடப்பட்டுள்ளதே?
பதில்: தமிழக அமைச்சர்களின் தகுதிகளை பற்றி தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டு வருவது இந்த ஆட்சியில் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஒரு அமைச்சர் திருச்சியில் ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்கள் கூறப்பட்டு அவர் பதவியிழக்கும் நிலை ஏற்பட்டது. வேறு இரண்டு அமைச்சர்களின் உதவியாளர்கள் கைதே செய்யப்பட்டார்கள்.
தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் கல்வித்தகுதி பற்றி பிரச்சனை எழுந்துள்ளது. அமைச்சர் எதுவரை படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; ஆனால் பி.ஏ. தேர்வு பெறாமலேயே, தேர்வு பெற்றதாக அரசு குறிப்பிலேயே இடம் பெற செய்திருப்பது மிகப்பெரிய தவறாகும்.
கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா "தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியம்'' என்ற பெயரில் ஓட்டுனர்களுக்காக நல வாரியம் கண்டிருக்கிறாரே?
பதில்: ஓட்டுனர்களுக்காக புதிதாக நல வாரியம் அமைக்கப்படவில்லை. தி.மு.கழக ஆட்சியிலேயே "தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுனர் நலவாரியம்'' அமைக்கப்பட்டு, அது முறையாக செயல்பட்டு வருகிறது. இந்தப்பெயரில், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் என்றிருந்தாலும் லாரி மற்றும் வேன் போன்ற இதர வாகன ஓட்டுனர்களும் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் என்றுதான் ஏற்கனவே விதி உள்ளது. ஆனால் லாரி மற்றும் வேன் ஓட்டுனர்கள், இந்த வாரியத்தில் தாங்கள் உறுப்பினராக சேர முடியாதோ என்றெண்ணி விடுவார்களோ என்பதற்காக, தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுனர் நல வாரியம் என்று தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பெயரை "தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியம்'' என்று மாற்றி மகிழ்ச்சியுடன் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ஓராண்டு சாதனை என்ன?:
இந் நிலையில் ஜெயலலிதா ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,
பழிவாங்கும் செயல், மக்களை அல்லல்படுத்தி- கொடுமைப்படுத்துகின்ற நடவடிக்கைகள், துப்புது ரகங்களை விளம்பரப்படுத்தி மது விற்பனையை அதிகப்படுத்தியிருக்கிற சாதனை, இவைகள் அனைத்துக்கும் மேலாக முன்னுக்குப்பின் முரணாக போராட்டத்தை கூடங்குளத்தில் முதலில் தூண்டிவிட்டு; பிறகு அதை அடக்குவதுபோல் அடக்கி; தேவையில்லாமல் மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது போன்ற செயல்பாடுகளை கூறலாம் என்றார்.
யார் இந்த முக்கூர் என்.சுப்பிரமணியன்?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அமைச்சர் சுப்பிரமணியன் (52). இவர் முக்கூர் அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக இருந்து செய்யாறு ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என பல பதவிகள் வகித்து வந்துள்ளார்.