காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: ஜூனில் மின்வெட்டு நேரம் குறையும்

தமிழகத்திற்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மாநிலத்தில் கடும் மின் வெட்டு ஏற்படுகிறது. சென்னையில் 2 நேரமும் மற்ற நகரங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் 5 மணி நேரத்திற்கு அதிகமாக மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் காற்றாலை மூலம் அதிகளவில் மின்சாரம் கிடைத்ததால் சில நாட்கள் மின் வினியோகம் தடையில்லாமல் இருந்தது. ஆனால் இதற்கிடையே மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
காற்று வேகம் குறைந்ததால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது. இதனால் மின் வினியோகம் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டது. எனினும் அவ்வப்போது காற்றாலை மின்சாரம் மூலம் மின்வெட்டு நேரம் தவிர மற்ற நேரத்தில் மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படுகிறது.
காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று காற்றாலை மூலம் 1,900 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதையும் சேர்த்து மொத்தம் 10,100 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது.
காற்று சீசன் தொடங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இன்னும் 15 நாட்களுக்குள் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும். கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. இதனால் வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு நேரம் குறைய வாய்ப்பு உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications