வாழை இலை விலை இரண்டு மடங்கு உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: சுபமூர்த்த தினங்கள் தொடர்ந்து வருவதால் வாழை இலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கட்டு இலை ரூ.1000க்கு விற்கப்படுகிறது.
திருமணம், பூப்புனித நன்னீராட்டு விழா, பெயர் சூட்டு விழா, கோயில் விழா என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் விருந்து உபசரிப்பில் வாழை இலை முதன்மை வகிக்கிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாழை இலை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களினால் விழாக்களில் வாழை இலை போன்று தோற்றமளிக்கும் பேப்பர் இலைகள், பாக்குமட்டை தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விலையை பொருட்படுத்தாமல் வாழை இலைகளே முற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் திருமணம் மற்றும் பண்டிகை நாட்களில் வாழை இலைகளின் விலை கிடுகிடுவென உயர்வதும், பின்னர் சரிவதும் வாடிக்கையாகி விட்டது. சாதாரண நாட்களில் ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வாழை இலை கட்டு ரூ.400 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. சில நேரங்களில் இதை விட விலை குறையும். இந்த மாதத்தில் தொடர்ந்து மூகூர்த்த நாட்கள் வருவதால் வாழை இலைகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழை இலை கட்டு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது. வாழை இலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வாழை இலை பயன்படுத்துவோர் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications