மருத்துவ கல்லூரி முறைகேடு- அன்புமணி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2009 ஏப்ரல் வரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலத்தில், போதிய கட்டமைப்பு வசதி இல்லாத இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.அ
இந்த வழக்கில் அன்புமணி உட்பட 10 பேர் மீது கடந்த ஏப்ரல் 27-ந் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தல்வந்த்சிங் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் வி.கே.சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கே.வி.எஸ்.ராவ் மீது வழக்கு தொடருவதற்கு தொடர்புடைய உயர் அதிகாரியிடம் இருந்து ஒப்புதல் ஆணையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் வழக்கில் தொடர்புடைய சில ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜுலை மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதி தல்வந்த்சிங் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications