ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுக்கு பணம்': 15 ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் வீடுகளில் சிபிஐ ரெய்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் ராஜ்யசபா தேர்தல் ரத்தானது தொடர்பாக அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த 2 ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 30ம் தேதி நடப்பதாக இருந்த தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி நடத்தியது. தேர்தல் ரத்தானதற்கு காரணமான ஊழல் மற்றும் குதிரை பேரம் தொடர்பாக ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து 32 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ. சரத் யாதவ், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. அஜய் மாரு உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அஜ்சு கட்சி, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனாததளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் தான் சோதனை நடக்கிறது.
இது தவிர கொல்கத்தாவில் ஒரு இடத்திலும் இன்று சோதனை நடந்து வருகிறது. மேலும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 21ம் தேதி விஷ்ணு பைய்யா(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), கே.என். திரிபாதி(காங்கிரஸ்) மற்றும் சுரேஷ் பாஸ்வான்(ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை வேட்பாளரான ஆர்.கே. அகர்வால் மற்றும் அவரது மருமகன் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் நடப்பதாக இருந்த அன்றைக்கு ஆர்.கே. அகர்வாலின் உதவியாளரின் காரில் இருந்து ரூ.2.15 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு மே 3ம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications