'வாஸ்து' பார்த்து தனி அலுவலகம் திறந்த எதியூரப்பா: அடுத்தது புது கட்சி?

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே தான் போகிறது. சுரஙக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி முதல்வர் பதவியை இழந்தார். தன்னை கட்சி காப்பாற்றும் என்று நினைத்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தற்போது மீண்டும் முதல்வர் பதவி கோரி வருகிறார். ஆனால் அவரை சமாதானம் செய்வதில் தான் பாஜக மேலிடம் முனைப்பாக உள்ளதே தவிர அவரது கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
இதனால் கடுப்பான எதியூரப்பா பெங்களூர் மல்லேஸ்வரம் ரோட்டில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளார். திறப்பு விழாவுக்கு கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, கர்நாடக பாஜக தலைவர் ஈஷ்வரப்பா ஆகியோரை அழைக்கவில்லை. அவரது அலுவலகக் கட்டிடத்தில் தான் பாஜக கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. எதியூரப்பாவின் நெருங்கிய நண்பரும், எம்.எல்.சியுமான லெஹர் சிங்கிற்கு சொந்தமான இந்த கட்டிடம் ராசியானது என்று கூறப்படுகிறது.
ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள அரசு வீட்டையும் அவர் காலி செய்கிறார். வரும் ஜூன் 1ம் தேதி முதல் அவர் டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் வசிப்பார்.
நேற்று முன்தினம் எதியூரப்பாவின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக பாஜக தலைவர்களிடையே உள்ள பிரச்சனையை தீர்க்க கர்நாடகாவுக்கான பாஜக தலைவர் தர்மேந்திரா பிரதான் மற்றும் கட்சி பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று பெங்களூர் வருகிறார்கள். இந்நிலையில் இன்று எதியூரப்பா வாஸ்து பார்த்து தனி அலுவலகம் திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதியூரப்பா விரைவில் கர்நாடகா ஜனதா கட்சி என்ற பெயரில் புது கட்சி துவங்குவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications