இடைத்தேர்தல்: ஜூன் முதல் வாரத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் புதுக்கோட்டையில் பிரச்சாரம்

புதுக்கோட்டை தொகுதி சிபிஐ எம்.எல்.ஏ. மு்ததுக்குமரன் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கார் விபத்தில் பலியானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் முத்துக்குமரன் போட்டியிட்டு வென்றதால் அங்கு மீண்டும் சிபிஐ கட்சியைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக்கப் போவதாக அதிமுக அறிவித்திருந்தது.
ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே ஆளுங்கட்சி தனது கட்சியைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானை வேட்பாளராக அறிவித்தது. திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. இந்நிலையில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீனிவாசன்,முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்ப்டடுள்ளனர்.
அதில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர் அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் தொண்டைமான் ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 32 அமைச்சர்கள் அடங்கிய 53 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஜெயலலிதா நியமித்துள்ளார். அவர்கள் அனைவரும் விரைவில் புதுக்கோட்டையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதுக்கோட்டையில் ஜூன் முதல் வாரத்தில் 1 நாள் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வரும் ஜூன் 3,4,5 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான அருண்பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஸ் ஆகி்யோரும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள்.
அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர்கள் தியாகு, ராதாரவி, குண்டு கல்யாணம், சரவணன், வையாபுரி, ராமராஜன், சிங்கமுத்து, நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா ஆகியோர் வாக்கு சேகரிக்கப் போவதாக அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவி்ததார்.












Click it and Unblock the Notifications