குருபெயர்ச்சி:புளியரை கோவிலில் சிறப்பு பூஜை- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
செங்கோட்டை: புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணிக் கணக்கி்ல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில் உள்ள சதாசிவ மூர்த்தி, சிவகாமி அம்மன் கோவில் பழமையான கோவிலாகும். இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கென்று தனி சன்னதி உள்ளது. தமிழகத்திலேயே தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி அமைந்துள்ள ஒரு சில கோவில்களில் புளியரை கோவில் முக்கியமானதாகும்.
இங்கு ஒவ்வொரு வியாக்கிழமையும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் குருபெயர்ச்சி நாளன்று நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நேற்று மாலை 5.18 மணிக்கு மேல் மேஷ ராசியிலிருந்து ரிஷிப ராசிக்கு குருபகவான் சஞ்சரித்ததையொட்டி புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குருபெயர்ச்சியை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், தேவாரம், இன்னிசை, மதியம் பஜனை நடந்தது. பின்னர் ருத்ரகாதசி, ஜெபம், ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீ்ண்ட வரிசையி்ல் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து புளியரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவேல், செல்வி, போக்குவரத்து காவலர் முருகையா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications