சிஏஜி எங்களை குறை சொல்லலைஜி!.. திமுக ஆட்சியைத் தான் சொன்னாரு..!: ஓ.பன்னீர்செல்வம்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்வது வழக்கமாக நடப்பது ஆகும். பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்கப்படும்.
31-3-2011-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை சட்டசபையில் 16.5.2012 அன்று வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன. இது பல பத்திரிகைகளிலும் வெளியானது.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றவை ஆனால், இந்த தவறுகள் எல்லாம் தற்போதைய அதிமுக ஆட்சியில் நடைபெற்றது போன்ற தோற்றத்தை சில பத்திரிகைகள் உருவாக்கி விட்டன.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, குறைபாடுகள், முறைகேடுகள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் தான் நடந்தது என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
31.3.2011ம் நாளுடன் முடிவடைந்த நிதியாண்டில், தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்ததாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டு 23 பொதுத் துறை நிறுவனங்களில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2010-2011ம் நிதியாண்டில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.10,294.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்துக்காக மின்சார வாரியத்துக்கு ஒரு குதிரை சக்திக்கு ரூ.250 என்று தமிழக அரசு வழங்கும் தொகை மிகவும் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், இந்த தொகையை ரூ.1,750 ஆக உயர்த்தி வழங்கியது. இதன் மூலம் தணிக்கை அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்ட குறை நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை குறைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதி பற்றாக்குறையை போக்க அரசின் வருமானங்களை பெருக்கவும் அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கவும், வனங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 32 மாவட்டங்களிலும் அதிகளவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படி, பல துறைகளிலும் முன்னேற்றத்தை காண அதிமுக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications