எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஜாகீர் உசேன்

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 25ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப் பெற வரும் 28ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அன்று மாலையே இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீனிவாசன்,முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொது வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துமாரி, அதே வளாகத்தில் உள்ள முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், தாசில்தாருமான கருப்பையா ஆகியோரிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வரலாம். 3 வாகனங்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படும், வாகனங்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்திவிட்டு வர வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளே தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு எம்.ஜி.ஆர்., அம்பேத்கார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பிறகு அவர் தேர்தல் அதிகாரி முத்துமாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை 4 பேர் முன்மொழிந்தனர்.
அதிமுக வேட்பாளர் அடுத்த வாரமும், ஐஜேகே வேட்பாளர் வரும் 23ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications