பி.ஏ.சங்மாவுக்கு பவார் ஆதரவு இல்லை: தேசியவாத காங்.ல் பிளவு ஏற்படும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக பி.ஏ. சங்மா முன்னிறுத்தப்படுவதற்கு அவர் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மக்களவை சபாநாயகரான பி.ஏ.சங்மாவை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, ஒடிசா மாநில முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் ஆகியோர் முன்னிறுத்தியுள்ளனர். சங்மாவை அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என்றும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற பெரிய பொறுப்புகளுக்கு வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு தமது கட்சிக்கு பலம் இல்லை என்பது தொடக்கம் முதலே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சரத்பவாரை நேற்று சங்மா சந்தித்துப் பேசினார். ஆனால் பவாரோ, தாம் இடம்பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவே தமது முடிவு என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சங்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும் என்று பவாரிடம் கூறினேன். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து இதனை வலியுறுத்தி வருகிறோம் என்று அவரிடம் விளக்கினேன்.

இந்தப் பதவிக்குப் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பலரும் உள்ளனர். தற்போது மக்களவையின் துணைத் தலைவராக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கரிய முண்டா, மத்திய அமைச்சர் கிருஷ்ணசந்திர தேவ், நாகாலாந்தின் முன்னாள் முதல்வர் எஸ்.சி.ஜமீர், முன்னாள் மத்திய அமைச்சர் அரவிந்த் நேதம் ஆகியோரும் தகுதி வாய்ந்தவர்கள்தான் என்பதை எடுத்துக் கூறினேன்.

நான் கூறியதை முழுவதும் கேட்ட பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முடிவை ஒட்டியே தங்கள் கட்சி முடிவெடுக்கும் என்று பவார் கூறிவிட்டார். எனினும், இந்த விஷயத்தில் நான் அளித்த அனைத்து விவரங்களையும் கட்சியினருடன் விரிவாக விவாதிப்பதாக பவார் உறுதியளித்துள்ளார் என்றார் சங்மா.

தேசியவாத காங்கிரசில் பிளவு?

சங்மாவுக்கு பவார் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், பழங்குடியினத்தவர் குடியரசுத் தலைவராவதற்கு அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர் தாக்குர் ரண்தீர் சிங் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியினராக இருப்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் உயர் பதவியை அடையும் காலம் நெருங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முதலில் ஆதரவு தெரிவித்த ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் பாராட்டுக்கு உரியவர்கள் என்றார். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+