நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2 இடத்தில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது.
தியான பீட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நித்யானந்தா தியான பீட நிர்வாகி சரவண பாபு கூறுகையில், "ஓசூரில் 2 இடங்களில் எங்கள் தியான பீடம் உள்ளது. இங்கு வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் போன் மூலம் சில தகவல்களை கேட்டனர். தியான பீடம் எத்தனை உள்ளது. எங்கு அமைந்துள்ளது. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது போன்ற விவரங்களைக் கேட்டனர். நாங்கள் விவரங்களை தெரிவித்தோம். மற்றபடி அவர்கள் எதற்காக விசாரித்தார்கள் என நாங்களும் கேட்கவில்லை, அவர்களும் தெரிவிக்கவில்லை," என்றார்.
வேறு சில இடங்களிலும் சிபிசிஐடி போலீசார் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications