தடையில்லா சான்றிதழ் விவகாரம்: பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்தது ஹைகோர்ட்
கன்னியாகுமரி: தடையில்லா சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நாராயண பிள்ளை அறக்கட்டளையானது கடந்த 1998-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பள்ளியைத் தொடங்க முடிவு செய்தது. ஏழாம் வகுப்பு மேல் தொடங்க சி.பி.எஸ்.இ. விதிகளின் படி கல்வி வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். முன்னதாக தமிழக அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
இதற்காக பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி இயக்குநரிடம் தடை இல்லாத சான்றிதழ் கோரி விண்ணப்பித்தது. ஆனால் விண்ணப்பத்தில் குறைபாடு இருக்கிறது என்று கூறி நிராகரிக்கப்பட்டது. மீண்டும் விண்ணப்பித்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதனால் அற்ககட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஆண்டு அறக்கட்டளையின் பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்முறையும் பள்ளிக் கட்டிடம் சரியாகக் கட்டப்படவில்லை என்று கூறி தடையில்லா சான்றிதழை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தரவில்லை. இதனால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வினோத்சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி நிர்வாகத்தை குறைகூறும் பள்ளிக் கல்வித் துறை அதை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கவில்லை. மேம்போக்காகவே சொல்லியிருக்கிறது. இதனால் அறக்கட்டளைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதுடன் வழக்கு செலவுக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் ரூ10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications