காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: கோடை காலத்திலும் கூடுதல் நீரை பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் போக்கு குறித்து விவாதிக்க காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மன்மோகன்சிங்குக்கு ஜெயலலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
9 ஆண்டாகிவிட்டது...
காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் இறுதியாக கடந்த 10.2.2003 அன்று நடந்தது. இக்கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டது. இதையடுத்து கடந்த 17.10.2011 அன்று தங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உத்தரவுகளை அமல்படுத்தும்படி மத்திய நீர்வள அமைச்சகத்தை வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி அந்த உத்தரவுகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய நீர்வள அமைச்சகம் எனக்கு தெரிவித்து இருந்தது. ஆனால், அதன்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. குறிப்பாக மிகவும் நெருக்கடியான கால கட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் வழங்கவில்லை.
கர்நாடகம் பிடிவாதம்
தற்போது, பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்திலும் கூட கர்நாடக அரசு தனது 4 அணைகளில் இருந்தும் அளவுக்கு மீறி கூடுதல் தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 அணைகளிலும் சேர்த்து 58.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் கடந்த 14-ந்தேதி அன்று எடுத்த கணக்கெடுப்பின்படி அவற்றில் 28.176 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. இதன் மூலம் கர்நாடகா கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரை 30.33 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி உள்ளது தெரிகிறது. இதற்கிடையே 11 டி.எம்.சி. தண்ணீர் இயற்கையாக வெளியேறியுள்ளது. மொத்தத்தில் 41 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு பயன்படுத்தி உள்ளது. தண்ணீர் வற்றும் கோடை காலங்களில் கர்நாடகா கூடுதல் தண்ணீரை பயன்படுத்துவதால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை.
மழை காலத்தில் மட்டுமே உபரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா சாகுபடியும் காலதாமதமாகிறது. எனவே, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட மத்திய நீர்வள கமிஷனை நீங்கள் வலியுறுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அவலநிலை ஏற்படாமல் இருக்க விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என 24-வது காவிரி கண்காணிப்பு கமிட்டி கூட்டத்தில் காவிரி நதி நீர் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆணையக் கூட்டம்
காவிரி நதி நீர் ஆணையம் மற்றொரு பிரச்சினையை உடனே பரிசீலிக்க வேண்டும். அதாவது காவிரி பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன பகுதிகளை விரிவுப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இந்த சூழ்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications