கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்கள் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும்: குலாம் நபி ஆசாத்
மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்..
மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவோருக்கு மருத்துவ மேற்படிப்பில் (எம்.டி.) சேர 50 விழுக்காடு இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றுவோருக்கு 10 மதிப்பெண்களும் பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றுவோருக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
ஆனால் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து மருத்துவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்றுவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் மருத்துவம் படித்து விட்டுப் பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு விவரங்கள் மத்திய அரசிடம் முழுமையாக இல்லை. அதனால், தொழில் தொடங்கும் மருத்துவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும்.
மருத்துவர் குறைந்தது மூன்று மாநிலங்களில் பதிவு செய்து விடுகிறார். சிலர் படித்த பின்பு வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள். இதனால், மருத்துவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பதிவு செய்ய இயலவில்லை.
மருத்துவர்களின் பதிவை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கிடைத்த தகவலின்படி, 2011-ம் ஆண்டு மார்ச் வரை 8,40,130 மருத்துவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications