வாக்கிங் போன தொழிலதிபர் டிராக்டர் மோதி பலி: கொலையா என்று விசாரணை
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே இன்று காலை வாக்கிங் சென்ற பிரபல தொழிலதிபர் டிராக்டர் மோதி பலியானார். இது திட்டமிட்டு நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த தேவஆசிர்வாதம் என்பவரின் மகன் கோயில்ராஜ். தொழில் அதிபரான அவர் ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட், மணல் லாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவரது மனைவி வசந்தா. அவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கோயில்ராஜ் தினமும் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். பைக்கில் செல்லும் அவர் அதை ஒரு இடத்தில் விட்டு விட்டு ராஜமன்னார்புரம் வரை வாக்கிங் சென்று விட்டு திரும்புவார்.
அதேபோல் இன்று காலை வாக்கிங் சென்ற அவர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஊரை நெருங்கும் போது எதிரே வந்த டிராக்டர் அவரது பைக் மீது பயங்கரமாக மோதி விட்டு அங்குள்ள கிணற்று தடுப்புச் சுவரை இடித்து தள்ளிவிட்டு நின்றது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சம்பவம் நடந்ததும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தட்டார் மடம் இன்ஸ்பெக்டர் நடராஜன், எஸ்ஐ வர்கீஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோதியதாக கூறப்படும் டிராக்டரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 அரிவாள், 1 பிராந்தி பாட்டில் மற்றும் திருமண அழைப்பிதழ் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டர் திசையன்விலை பகுதியைச் சேர்ந்தது என தெரிகிறது. இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications