பொன்சேகாவை விடுதலை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவில் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர நேற்று முன்தினம் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான் உத்தரவில் ராஜபக்சே கையெழுத்திட்டதாகத் தெரிவித்தார்.
இந்த உத்தரவானது நாளை திங்கள்கிழமையன்று நீதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பந்துல ஜெயசேகர கூறினார். ராஜபக்சே கையெழுத்திட்டுள்ள உத்தரவானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் பொன்சேகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை படுகொலை செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பொன்சேகாவை விடுவிக்கும் உத்தரவில் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications