சென்னையில் நக்ஸல் இயக்க தீவிரவாதி கைது-மனைவி தப்பினார்!
ஆந்திரா, ஒடிஸ்ஸா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. தமிழகத்திலும் தங்கள் தளத்தை அமைக்க மாவோயிஸ்டுகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
2007ம் ஆண்டு பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள முருகமலை காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடும் பயிற்சி தளம் அமைத்து பயிற்சி பெற்றனர். அப்போது போலீசார் அதிரடி வேட்டை நடத்தி, மாவோயிஸ்டுகள் அமைப்பின் தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரை கைது செய்தனர்.
அங்கிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் சொயலாளர் விவேக் (45) தப்பிவிட்டார். இவரை க்யூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர்.
விவேக்குக்கு பாலன், குமார், ஆனந்தன், ராஜா, ராஜாமணி என பல பெயர்கள் உண்டு. விவேக் நேற்று காலையில் சென்னை அண்ணா நகர் ஷெனாய் நகர் பகுதியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மனைவி பத்மா என்ற சத்யமேரியுடன் (36) கலந்து கொண்டுள்ளார் என்ற தகவல் க்யூ பிராஞ்ச் போலீஸாருக்குக் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி சம்பத்குமார் தலைமையில் க்யூ பிராஞ்ச் போலீசார் ஷெனாய் நகர் பகுதியில் மாறு வேடத்தில் நின்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, வெளியே வந்தபோது விவேக்கை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி பத்மா தப்பிவிட்டார்.
கைதான விவேக்கை போலீசார் உடனடியாக பெரியகுளம் கொண்டு சென்றனர். பெரியகுளம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தப்பியோடிய விவேக்கின் மனைவி பத்மாவும் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்தான். 2004ம் ஆண்டு ஊத்தங்கரையில் போலீசார்-நக்ஸல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தபோது, பத்மாவும் போலீசாருடன் மோதியவர் தான்.
மாவோயிஸ்ட் அமைப்புக்கு நிதி திரட்டுவது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் விவேக் ஈடுபட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸார் விவேகிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் தீவிரவாத பயிற்சி பெற்றவர்:
கைதான விவேக் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் ஜனார்த்தனம். விவேக் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்தவர். ஆந்திர மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாத அமைப்பில் சிறிது காலம் இணைந்து செயல்பட்டார். அங்கு தீவிரவாத பயிற்சி பெற்றார்.
துப்பாக்கியால் சுடுவது மற்றும் வெடிகுண்டு செய்வதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ஆந்திராவில் பயிற்சி பெற்று வந்தபிறகுதான், கடந்த 2007ம் ஆண்டு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் அமைப்பை வலுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.
பத்மாவும் என்ஜினீயர்தான்:
விவேக்கின் மனைவி பத்மாவும் டிப்ளமோ என்ஜினீயர் ஆவார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் பெற்றோருடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். பின்னர் விவேக் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். பத்மாவும் துப்பாக்கி சுடுவதில் வல்லமை பெற்றவர் ஆவார்.