மீரா குமார் ஜனாதிபதியாக மம்தா பானர்ஜி ஆதரவு, பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு!

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி பிரணாபை ஆதரிக்க மறுத்துள்ளார். மாறாக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை குடியரசுத் தலைவராக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அந்த கட்சி தான் தேர்ந்தெடுக்க முடியும். அது என் வேலையன்று. நான் அதில் குறுக்கிடவும் மாட்டேன். என்னை கேட்டால் நான் சபாநாயகர் மீரா குமாருக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன். அவர் மிகவும் அமைதியானவர், மென்மையாக பேசக்கூடியவர். குடியரசுத் தலைவர் பதவிக்கு மீரா குமார், மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டால் மகிழ்ச்சி.
குடியரசுத் தலைவர் பதவிக்கான எனது விருப்பப் பட்டியலில் பிரணாப் முகர்ஜியின் பெயர் இல்லை. ஆனால் காங்கிரஸ் அவரை முன்மொழிந்தால் அதை எதிர்ப்பதற்கு நான் யார். குடியரசுத் தலைவர் வேட்பாளர் விஷயத்தில் சோனியா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா காங்கிரஸ் அல்லாத அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications