தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை கே.கே.நகர் திமுக செயலாளர் தனசேகரனை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளரான தனசேகரன், சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனசேகரன் மீது ஜார்ஜ், கலைவாணி, பரமேஸ்வரி, ஜீவானந்தம் உள்பட 6 பேர் நில அபகரிப்பு மோசடி புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தனசேகரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனசேகரனை 16-9-2011 குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தர விட்டார்.
இதை தொடர்ந்து தனசேகரன் மனைவி விஜயகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் தர்மா ராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விஜயகுமாரியின் மனுவை விசாரித்தது. தனசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்றும் அந்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிறையிலிருந்து தனசேகரன் விடுதலையாக உள்ளார்.