அன்னா ஹசாரே குழுவில் கலகம்- கெஜ்ரிவாலுக்கு எதிராக மற்றொரு உறுப்பினர் பகிரங்க கடிதம்
மும்பை: சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் கட்சிகளைப் போலவே குழு மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து சர்ச்சைகளுக்கும் நாயகனாக இருக்கும் கெஜ்ரிவால்தான் இம்முறையும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அன்னா ஹசாரே குழு சார்பில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இந்த தளத்தை ஷிவேந்திர சவுகான் என்பவர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த சவுகானுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இப்போது மோதல். சவுகான் தன்னிச்சையாக செயல்படுவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
கெஜ்ரிவாலின் புகார்களுக்குப் பதிலளித்து பேஸ்புக்கில் பகிரங்கமாக சவுகான் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹசாரே இயக்கத்தின் நலனுக்கு எதிராக நான் செயல்படுகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கம். எங்களில் பலர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த இயக்ககத்தில் இணைந்துள்ளோம். இதில் இணைவதற்கு எந்தவித சம்பிரதாய நடை முறைகளும் கிடையாது. எனவே, ஒரு குழு மூலம் ஒருவரை நீக்க முடியும் என்ற கேள்விக்கே இடமில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது மிகப் பெரிய பணியாகும். எந்த வழி சாத்தியமோ அந்த முறையில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இவர்களை தேர்ந்து எடுப்பதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையும் வகுக்கப்படவில்லை. கெஜ்ரிவால் உள்பட உயர்நிலைப் குழு உறுப்பினர்கள் சிலர் முறைப்படி இப்பதவியை பெறவில்லை என்று காட்டமாக எழுதப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications