டி.சி, மார்க் ஸீட்டுக்கு 'ரேட்' பிக்ஸ் செய்யும் கரூர் கல்வி நிறுவனங்கள்
கரூர்: பிரபல தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாண, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழை பெற ஆயிரக்கணக்கில் கட்டாய நன்கொடை வழங்க வேண்டும் என கல்வி நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக பெற்றோர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் சில பள்ளிகளும், மெட்ரிக் பாடத் திட்டத்தின் கீழ் பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பலர் கல்வி நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கல்வியின் தரம், கல்வி கட்டணம், நன்கொடை போன்ற பல்வேறு குறையாடுகள் மற்றும் வற்புறுத்தல் காரணமாக மாற்று கல்வி நிலையங்களை நாடிச் செல்கின்றனர்
அப்படி வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்தற்கான டி.சி. மற்றும் மார்க் சீட் போன்றவற்றை ஏற்கனவே பயின்ற நிறுவனங்களில் இருந்து பெற வேண்டும். இந்த வாய்பைப் பயன்படுத்திக் கொள்ளும் பல கல்வி நிலையங்கள், தங்களிடம் இருந்து வேறு கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளிடம், டி.சி. மற்றும் மார்க் சீட் பெற பல ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து கொள்ளையடிக்கின்றனர்.
ரேட் எவ்வளவு?
முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ 2000, 5-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ரூ5000, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 7,500 வரை கட்டாய வசூல் செய்து வருகின்றனர். இந்த கட்டாய நன்கொடை வசூல் மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பினாலும் பணம் கொடுத்தால்தான் டி.சி. மற்றும் மார்க் லிஸ்ட் கிடைக்கும் என்பதில் கறாராக இருக்கின்றன பள்ளி நிர்வாகங்கள்.
ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே போலத்தான் கொள்ளையடிக்கின்றனராம் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற பகல் கொள்ளையைத் தடுக்காமல் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தூங்கி வழிவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலவகம் தூங்கி வழியாமல், இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பள்ளி நிர்வாகம் மீது முறையான நடவடிக்கை எடுத்தால் தான் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் மீதும், கல்வித்துறை மீதும் முழு நம்பிக்கை கிடைக்கும் என்பது பெற்றோர்- மாணவர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications