பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை அடுத்து தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் தட்டுப்பாடு நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் கிடைக்காமல் அல்லாடினர்.
மத்திய அரசு கடந்த 23ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் விலையை ஓரேயடியாக லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடாகி விடடது. போதிய வினியோகம் இல்லாததால் பல பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை. மீதமுள்ள பங்குகள் பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கும் வரை திறந்துவிட்டு காலியானவுடன் மூடுவிடுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நிலவி வரும் இந்த தட்டுப்பாடு நேற்று மேலும் அதிகரித்தது. சென்னையில் யூரோ 4 வகை டீசல் வினியோகம் இல்லாததால் தான் இந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னைக்கு வெளியே யூரோ 3 வகை டீசல் விற்கப்படுகிறது. ஆனால் யூரோ 3 வகை டீசலால் காற்று அதிகளவில் மாசுபடும் என்பதால் சென்னை நகருக்குள் அந்த வகை டீசலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்த தட்டுப்பாடு தீரும் என்று பெட்ரோல் முகவர்கள் தெரிவித்தனர். சென்னையில் மட்டும் 5 லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவு வினியோகம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நேற்று சுமார் 40 முதல் 50 சதவீத பங்குகள் மூடியிருந்தன. அதனால் மீதமுள்ள பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications