ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் ஆர்பாட்டம்
லண்டன்: லண்டனுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே லண்டன் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பும், எச்சரிக்கையும் தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை இங்கிலாந்து மகாராணியின் வைரவிழா நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் செயலாகும். மேலும், போர்க்குற்றவாளி இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்து வைப்பதை தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
இந்த எச்சரிக்கையையும் மீறி ராஜபக்சே லண்டனில் காலடி எடுத்து வைத்தால் தமிழ் மக்களின் செயல்பாடுகள் இங்கிலாந்து மகாராணியின் வைரவிழா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாக அமையும் என்றும், இதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதால், ராஜபக்சேவின் வருகையை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications