தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர முடியாது: கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கர்நாடகம் பிடிவாதம்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருவதாக காவிரி கண்காணிப்புக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கண்காணிப்புக் குழுக் கூட்டம்
இந்நிலையில் டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மத்திய நீர் வளத்துறை செயலர் துருவ் விஜய் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான தமிழக அரசின் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, தமிழக பொதுப்பணித்துறை செயலர் சாய் குமார், கர்நாடக அரசின் மாநில தலைமைச் செலயர் எஸ்.வி. ரங்கநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வாதம்
இக்கூட்டத்தில் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
நடுவர்மன்ற இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 205 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஜூன் மாதத்தில் 10.16 டிஎம்சி, ஜூலை மாதத்தில் 42.76 டிஎம்சி, ஆகஸ்டில் 54.72 டிஎம்சி, செப்டம்பரில் 29.36 டிஎம்சி என மொத்தம் 137 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டும்.
ஜூன் முதல் செப்டம்பர் மாத காலத்தில்தான் தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வர். ஆனால், மழைக்காலத்தில் தமிழகத்துக்கு மழை நீரைத் திறந்துவிடும் கர்நாடக அரசு, கோடை காலத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்குவதில்லை என்று கூறியதுடன் கர்நாடகத்தின் ஹாரங்கி அணை, ஹேமாவதி அணை, கிருஷ்ண ராஜ சாகர் அணை, கபினி அணை ஆகியவற்றில் தேங்கியிருந்த நீரின் அளவு, அந்த நீரைக் கோடைக்காலத்துக்கு முன்பே கர்நாடகம் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை பவர் பாயிண்ட் மூலம் தமிழக அதிகாரிகள் விளக்கினர்.
இதையடுத்து, நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவரும் மத்திய நீர் வளத்துறை செயலருமான துருவ் விஜய் சிங் கர்நாடகத் தரப்புக்கு அறிவுறுத்தினார்.
கர்நாடகம் பிடிவாதம்
ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை மழைக்காலங்களின் போதே கர்நாடகம் வழங்கி விடுகிறது. காவிரி நடுவர்மன்ற உத்தரவு அரசிதழில் இடம்பெறவில்லை. அதனால், அந்த உத்தரவை கர்நாடகம் பின்பற்றத் தேவையில்லை. வரும் நாள்களில், கர்நாடகத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தே தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கர்நாடகம் தரப்பில் தெரிவிக்கபப்ட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வலியுறுத்தினார். ஆனால், இதுகுறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவுற்றது.
வெளியேறிய மத்திய செயலர்
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளே சுமுகத் தீர்வு காணவேண்டும் என்று கூறி பாதியிலேயே துருவ் விஜய் சிங் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செய்தியாளர்கள் கூட்டம் குறித்து கேட்டதற்கு, தமிழகம், கர்நாடகம் இரு மாநில அதிகாரிகள்தான் பேசித் தீர்வு காண வேண்டும் என்று விஜய்சிங் பதிலளித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த தமிழக, கர்நாடக அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications