தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுக்க சிறப்புப் படைகள்- வீடியோ மூலம் கண்காணிப்பு
திருநெல்வேலி: தமிழகத்தில் ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க காவல்துறையின் சிறப்பு படையினர் வீடியோ மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரள மற்றும் ஆந்திராவுக்கு மணல் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தாமிரபரணி, பாலாறு, காவிரி, வைகை ஆறுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது.
ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் குடிநீரும் மாசுபடுகிறது. மணல் அள்ள தடை விதிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணல் அள்ள கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அதையும் மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மணல் கொள்ளையர்கள் இரும்பு கரம் கொண்டு ஓடுக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க சிறப்பு படை அமைக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் டிஐஜிகளுக்கு காவல்துறை தலைவர் ராமானுஜம் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு சப் டிவிசன் வாரியாக இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கொள்ளை தடுப்பு சிறப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 போலீசார் ஒவ்வொரு படையிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் ஆற்றங்கரையில் மணல் அள்ளும் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இதுதவிர ஏற்கனவே மணல் அள்ளப்பட்ட இடங்களில் எவ்வளவு ஆழத்திற்கு அள்ளப்பட்டுள்ளது, லாரிகள் செல்வதற்கு வசதியாக மணல் கொள்ளையர்கள் அமைத்துள்ள பாதை ஆகியவற்றை வீடியோ எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications