யாருக்காக?.. கைத்தறி அமைச்சர் வெட்டிய கிடா பேத்திக்கா?, பதவிக்கா?!
ராமநாதபுரம்: அமைச்சர் டாக்டர். சுந்தர்ராஜன் தனது குலதெய்வம் கோவிலில் பேத்திக்கு மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து கொடுத்தார். ஆனால் அவர் உண்மையிலேயே தனது பதவிக்கு ஆபத்து வராமல் இருக்கத் தான் கிடா வெட்டினார் என்று எதிர் கோஷ்டியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள கூரிச்சாத்த அய்யனார் கோவிலில் தனது பேத்திக்கு உறவினர்கள் சகிதம் பயபக்தியோடு மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து கொடுத்தார். மேலும் அதிமுகவைச் சேர்ந்த 6 ஒன்றியச் செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிளையும் அழைத்து விருந்து வைத்துள்ளார்.
இது பற்றி அறிந்த எதிர் கோஷ்டி, அமைச்சர் தனது பதவிக்கு ஆபத்து வரக் கூடாது என்பற்காக தான் தனது குலதெய்வம் கேவிலில் கிடா வெட்டியுள்ளார். ஆனால் இதை மறைக்க தனது பேத்திக்கு நேர்த்திக் கடன் என கூறுகின்றார் என்று பிட்டை போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் தரப்பு கிடா வெட்டுவதிலுமா அரசியல் செய்வார்கள் என தலையில் அடித்துக் கொண்டனர்.