ஜெ., கருணாநிதிக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் சோலை மறைவு
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் சோலை உடல் நலக்குறைவு காரணாக காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தில் பிறந்த சோலை (81) சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் தனது இல்லத்தில் காலமானார்.
சோலையின் உடல் அவரது இல்லத்தில் (எண், எண் 11, தொல்காப்பியர் தெரு, சீனிவாசா நகர், புதுப் பெருங்களத்தூர், சென்னை-63) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மின்சார மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு பெயர் எடுத்தவர் பத்திரிகையாளர் சோலை. பிரபல வார இதழான நக்கீரன் உட்பட பல்வேறு இதழ்களில் பரபரப்பு கட்டுரைகள் எழுதியவர். ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட்டாகவும், பின்பு எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கியவர். மேலும் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சில காலம் அரசியல் ஆலோசகராக இருந்தார்.
பின்பு திமுக தலைவர் கலைஞருடன் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார். சோலை மறைவுக்கு தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி இரங்கல்
சோலை மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,
பழம்பெரும் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோலை அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலே இருக்கிறார் என்ற செய்தியினை ஸ்டாலின் சொன்னதிலிருந்தே, அவர் நலம் பெற்று விட்டு விட்டாரா என்று விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், நலம் பெறாமல் இயற்கை எய்திவிட்டார்.
அரசியலை நன்றாகப் புரிந்து கொண்டு, யாருக்கும் அஞ்சாமல், தனது கருத்துக்களைக் கட்டுரையாகத் தீட்டக் கூடியவர். அவருடைய இழப்பு பத்திரிகை உலகத்திற்குப் பேரிழப்பாகும்.
2008ஆம் ஆண்டு சோலை அவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பிலும், 2009ஆம் ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications