நாளைய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப் போவது என்ன?

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்திருக்கும் சூழல், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள், வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு என்பது போன்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முன் நிற்கும் பூதாகரமான பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து நாளைய கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட இருக்கிறது.
இதேபோல் பிரதமர் மன்மோகன்சிங் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு இப்போது பெரும் தலையிடியாக இருக்கிறது. இதுபோதாதென்று அன்ன ஹசாரே மற்றும் ராம்தேவ் ஆகியோர் ஊழலுக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப்படுத்தியிருப்பது பற்றியும் விவாதிக்கப்படக் கூடும்.
இதேபோல் ஆந்திரா மற்றும் கர்நநாடக மாநில காங்கிரஸ் கட்சி நிலைமைகள் குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியை சிறையிலடைத்த நிலையில் காங்கிரஸுக்கு எதிராக ஜெகனுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசி வருகிறது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்திருக்கிறார். இந்த நிலைமையை சீர் செய்வது தொடர்பாகவும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்திதான் இறுதி முடிவெடுப்பார் என்பதால் நாளைய கூட்டத்தில் இதுபற்றி அதிகம் விவாதம் இருக்காது என்று கூறப்பட்டாலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் செயற்குழுவின் கூட்டத்துக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு திரிணாமுல் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பெட்ரோல் விலை உயர்வின்போது ஆட்சியைவிட்டு வெளியேற நேரிடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவும் கூட மிரட்டிப் பார்த்திருந்தது. இப்படி முறுக்கிக் கொண்டு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொள்வதா? அல்லது லாலு, முலாயம், மாயாவதி போன்ற சக்திகளுடன் அரவணைத்துப் போவதா? என்பது பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications