என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 44 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது- தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப
நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 44 நாட்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று பணிக்குத் திரும்பினர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நெய்வேலி, புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இழுபறியே நீடித்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் மண்ட தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஜெகன்னாத ராவ், தொழிலாளர் நலத்துறை ஆணையர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களை படிப்படியாக பணிநிரந்தரம் செய்ய இந்த பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் போராட்ட காலத்திற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து 13 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று பணிக்குத் திரும்பினர். ஆனால் சிஐடியூ போன்ற சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளன.