அன்னா, ராம்தேவ் போராட்டங்கள் நியாயமானவையே: ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங்
லக்னோ: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் யோகா குரு பாபா ராம்தேவின் போராட்டங்கள் நியாயமானவையே என்று ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக அன்னா ஹசாரேயும் பாபா ராம்தேவும் நடத்துகிற போராட்டம் நியாயமானதே. நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்றவே இருவரும் போராடி வருகின்றனர்.
நாட்டின் சாதாரண மனிதனைக் கூட ஊழல் என்பது பாதித்திருக்கிறது. இதை உரிய வழிகளில் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. ஊழலையும் கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வருவதிலும் மத்திய அரசு உரிய வழிகளைக் கண்டறிய வேண்டியது அவசியம்.
எந்த ஒரு அரசியலிலும் இப்போதைக்கு இணையும் திட்டம் இல்லை. அதேபோல் பொதுஇடங்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைப் பேசவும் நான் விரும்பவில்லை. ராணுவம் என்பது எப்போதுமே அரசியலில் இருந்து விலகியே இருக்க வேண்டும். நாட்டின் உயரிய அமைப்புதான் ராணுவம் என்றார் அவர்.
ராணுவத்தில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் சர்ச்சைக்குள்ளானவர் ஜெனரல் வி.கே.சிங். அன்னா ஹசாரே குழுவில் இணைவீர்களா என்பதற்கு அவர் நேரடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால் அவர் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெறக் கூடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications