தேமுதிக நிர்வாகிகளை வெளுத்து வாங்கிய விஜயகாந்த்: பதட்டத்தில் நிர்வாகிகள்

பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும் திருச்சியில் தேமுதிக சார்பில் கடந்த 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்தது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மே 31ம் தேதி மாலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். இரவு திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
மறுநள் அதாவது ஜூன் 1ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் காதிகிராப்ட் அருகே காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு விஜயகாந்த் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசிய அவர், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற பிறகு தனது கட்சிகாரர்களையும் வெளுத்து வாங்கிவிட்டார்.
ஆர்பாட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என்பதால் டென்ஷனான விஜயகாந்த், இது ஒரு கூட்டமா, நமக்கு இவ்வளவுதான் கூட்டம் வருமா, திருச்சியில் தான் நமக்கு நல்ல மாஸ் இருக்கே. தொண்டர்களும், ரகிகர்களும் வந்திருந்தாலே போதுமே. கூட்டம் கட்டுக்கு அடங்காமல் போய் இருக்குமே. சரி. இனி வரும் காலத்தில் நீங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் செய்ய முடியும். அது மட்டும் அல்ல. அது தான் உங்கள் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு என மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோரை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.
விஜயகாந்தின் இந்த பேச்சால் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிடுமோ என திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications