கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியோர் மீதான அனைத்து வழக்குகளைத் திரும்பப் பெற கோரிக்கை

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களுக்கான ஆதரவுக் குழு சார்பில் பொது விசாரணை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம் கடந்த மே14-ந் தேதி பொதுவிசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. அறிக்கையை கீதா ராமசேஷன் வெளியிட முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி பெற்றுக் கொண்டார்.
பின்னர் கீதா ராமசேஷன், வசந்திதேவி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், பிரபா கல்விமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் உரிமை மீறப்படுவதுதான் எங்கள் கவலையாகும். அவர்கள் மீது தேச துரோக குற்றம், 2 நாடுகளுக்கு இடையே பகையை உருவாக்கும் குற்றம் போன்ற கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனநாயக உரிமையை செயல்படுத்தும்போது மேற்கொள்ளப்படும் சாதாரண சட்ட நடைமுறைகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை. போராடும் மக்களின் பேச்சுரிமை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதி மக்களின் சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கேட்டும் பல்வேறு தகவல்களை அளிக்க அரசு மறுக்கிறது. சட்டங்களை தவறாக பயன்படுத்தி மக்களை துன்புறுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட்டு, அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். 144 தடை உத்தரவை நிறுத்தி, இயல்பு வாழ்க்கையை அங்கு அனுமதிக்க வேண்டும் என்றனர் அவர்கள்.












Click it and Unblock the Notifications