டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி
கே.ஆர். ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மக்களின் அனைத்து நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதற்கு முரணாக உடல்நலனைக் கெடுக்கும் மதுபானத்தை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்வதற்கான உத்தரவை கடந்த 26.10.03 அன்று தமிழக அரசு பிறப்பித்தது. அரசியல் சாசனத்தின் 47ம் பிரிவின்படி, போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு விரோதமாக மதுபானத்தை அரசே விற்பனை செய்கிறது. மதுவை அரசே விற்பனை செய்வதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்படுவதால், டாஸ்மாக் தொடர்பான அரசாணையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
இதுபோன்ற பிரச்சனையில் சென்னை மது விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் தமிழக அரசுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் பார்க்கும்போது, மனுதாரரின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்கிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.