ஆன்லைன் மூலம் கருணாநிதியை வாழ்த்திய 87,000 பேர்!
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாளை முன்னிட்டு உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திட மாணவர் அணி சார்பில் http://www.wishthalaivar.com/ எனும் இணையதளத்தினை பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முதல் வாழ்த்தினை பதிவு செய்து கடந்த 2-ந் தேதி தொடங்கிவைத்தார்.
அன்று முதல் 3-ந் தேதி வரை இரண்டு நாட்களில் அமெரிக்கா, கனடா, பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவீடன், இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, சவூதி அரேபியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 87,213 பேர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மெல்போர்ன் மேயர் ராபர்ட் டாயல் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கனடா நாட்டில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர் குழு பிரதிநிதி நிரஞ்சனும் - அவரது ஆதரவாளர்களும் "தனி தமிழ் ஈழம் உருவாக்கிட தங்களால் மட்டுமே முடியும் தலைவா!'' என்றும்; "எங்கள் தமிழ் ஈழ கனவினை நனவாக்குவது தங்கள் கைகளில்தான் உள்ளது'' என்றும் வாழ்த்தினை தெரிவித்தனர். அதோடு, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களும் இதுபோன்றே வாழ்த்து செய்தினை அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு உலகெங்குமுள்ள தமிழர்கள் தெரிவித்த 87,213 வாழ்த்துகளையும், தி.மு.க. மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி நேற்று காலை, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி பார்வையிட, மடிக்கணினி வாயிலாக காண்பித்தார்.
அப்போது மாணவர் அணி துணை செயலாளர் பூவை ஜெரால்டு மற்றும் பா.அருண், இந்த இணையதளத்தில் உருவாக்கிட முக்கிய பங்காற்றிய மாணவர் அணி தொழில்நுட்ப பிரிவினராகிய என்.நவீன், எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.