ராசாவை சந்தித்தார் ஸ்டாலின்- கனிமொழியும் உடன் சென்றார்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ராசா டெல்லியில் தங்கியுள்ளார். அவர் தமிழகம் வருவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடை நேற்றுதான் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலி்ன் நேற்று திடீரென டெல்லி வந்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்.பி வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் வந்தனர். பின்னர் அனைவரும் ராசா வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு அவர்களுடன் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இணைந்து கொண்டனர். அவர்களை ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் ராசாவுடன் கால் மணி நேரம் பேசினார் ஸ்டாலின்.
சந்திப்புக்குப் பின்னர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்குத் திரும்பினார்.
முன்னதாக டெல்லி வந்த ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராசா ஜாமீனில் விடுதலையானபோது நான் லண்டன் போயிருந்தேன். இதனால் சந்திக்க முடியவில்லை. எனவேதான் இப்போது வந்து சந்தித்தேன். சோனியாவையோ அல்லது பிரதமரையோ சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.