கல்லூரியில் சேர தாய் தடை விதித்ததால் ஹேர்டை குடித்து பெண் தற்கொலை!
சுரண்டை: கல்லூரியில் சேர்ந்து படிக்க அம்மா தடை விதித்ததால் ஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை கக்கன்நகரை சேர்ந்த சுடலை என்பவரது மகள் சத்யா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ்டூ முடித்தார். அதன்பிறகு அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த சம்பளத்தை சேமித்து வைத்த சத்யா இந்த ஆண்டு கல்லூரியில் படிக்க போவதாக தாய் ஆவுடையம்மாளிடம் கூறினார்.
ஆனால் தந்தை இறந்து விட்டதால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே மேற்கொண்டு படிக்க வேண்டாம். உனக்கு திருமணம் செய்து வைக்கும் வழியை பார்ப்போம் என்றார். இது சத்யாவுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
கல்லூரி படிப்புக்கு தாய் தடை போட்டதால் ஹேர்டை குடித்தார். அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சத்யா இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.