ஐபிஎல் 5 ஸ்பார்ட் பிக்சிங் புகார் குறித்து விசாரணை தேவை- கீர்த்தி ஆசாத்
கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்கிய ஐபிஎல் 5 தொடர், மே மாதம் 27ம் தேதி முடிவடைந்தது. இதில் சில போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக தனியார் டிவி சேனல் செய்தியை வெளியி்ட்டது.
இது குறித்த புகாரை விசாரித்த இந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸை சேர்ந்த சுசிந்திரா, புனே வாரியர்ஸின் மோனிஷ் மிஸ்ரா, கிங்ஸ் லெவன் பஞ்சாபின் அமித் யாதவ், ஸ்ரீவத்சவா, டெல்லி டேர்டெவில்ஸை சேர்ந்த அபினவ் பாலி ஆகிய 5 வீரர்களையும் சஸ்பெண்ட் செய்தது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் 5 ஸ்பாட் பிக்சிங் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய 5 வீரர்கள் மீது இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? குற்றச்சாட்டப்பட்ட 5 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். பிசிசிஐக்கு கிரிமினல் விசாரணை நடத்த எந்த அதிகாரமும் இல்லை. இது போன்ற புகார்களை போலீசார் தான் விசாரிக்க வேண்டும்.
நாட்டில் சூதாட்டங்களை தடை செய்யும் முன், விளையாட்டு வாரியங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் வரிவிதிப்பின் மூலம் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்படுகிறது என்றார்.
ஐசிசியின் ஊழல் தடுப்புக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த ரவி சுவானி, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புக் குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான குழு 5 வீரர்களின் புகாரை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.