காதலிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற திருமா கட்சி நிர்வாகி, தந்தையுடன் கைது
சென்னை: காதலியை கடுமையாக தாக்கி அவரது வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, அவரது தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ரமேஷ்(40). பெரியபாளையத்தை அடுத்த தண்டலம் பஜார் தெருவை சேர்ந்தவர். இவர் சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த மாரியம்மாள்(28) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பி.எல். பிடித்து வரும் மாரியம்மாளை திருமணம் செய்ய ரமேஷின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து மாரியம்மாளுக்கு தெரியாமல், பெற்றோர் பேசி முடித்த பெண் ஒருவரை ரமேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தண்டலத்தில் உள்ள ரமேஷின் வீட்டிற்கு சென்ற மாரியம்மாளுக்கு ரமேஷிற்கு திருமணமானது தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த மாரியம்மாள், ரமேஷுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். அதற்காக தனது சகோதரி அம்மு, தாய் மணியம், தந்தை நாகன் ஆகியோருடன் சேர்ந்து மாரியம்மாளை அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியம்மாளின் வாயில் விஷத்தை ஊற்றி குடிக்க வைத்துள்ளனர்.
சற்று நேரத்தில் மயக்கமடைந்து விழுந்த மாரியம்மாள் இறந்ததாக கருதிய ரமேஷ், அவரை காரில் ஏற்றி சென்று எருக்கஞ்சேரியில் உள்ள சாலையில் போட்டுவிட்டு சென்றார். சற்று நேரத்தில் உயிருக்கு போராடிய மாரியம்மாளை அப்பகுதியினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு மாரியம்மாளுக்கு நினைவு திரும்பியது. இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மாரியம்மாளிடம் விசாரித்தார். மாரியம்மாள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ரமேஷ், அவரது தந்தை நாகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக ரமேஷின் சகோதரி மற்றும் தாயாரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications