அமைச்சரின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியை மிரட்டிய பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு!
புதுக்கோட்டை: தேர்தல் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநில அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது, துறை அமைச்சர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அம்பாள்புரம் பகுதிக்கு மண்டல பொறுப்பாளராக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனும், ஒருங்கிணைப்பாளராக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர் வீரமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வீடுவீடாக சென்று நேற்று ஓட்டு சேகரித்தனர். இவர்களை துணை தாசில்தார் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் பின் தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த அமைச்சர் செல்லப்பாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி, அவரது முன்னிலையில், துணை தாசில்தார் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு அதிகாரி, அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இது குறித்து பறக்கும் படை துணை தாசில்தார் நாகராஜன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அமைச்சர் செல்லபாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ.) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications