கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்களின் நேரத்தை மாற்றி இயக்க கோரிக்கை

இது குறி்த்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை ஜுலை மாதம் ஒன்றாம் தேதி புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இந்த கால அட்டவணையில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கபட்ட ரயில்கள் இயங்கும் நேரம் மற்றும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல் போன்ற அறிவிப்புகள் இடம்பெறும்.
இந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்படுகின்ற ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்திலிருந்து இயங்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி இயக்கக் கோரி குமரி எம்.பி. ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகள், மத்திய அரசு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயாலும், திருவனந்தபுரம் ரயில் கோட்டத்தினராலும் குமரி மாவட்ட ரயில்வே துறையின் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது. குமரி மாவட்ட பயணிகளுடைய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவில்-பெங்களூர் வாராந்திர ரயில் பகல் நேரத்தில் செல்வதால் தென் மாவட்ட பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த ரயிலின் நேரத்தை மாற்றி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட செய்து காலை 8 மணிக்கு பெங்களூரை சென்றடையுமாறும், மறுமார்க்கம் பெங்களூரிலிருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படச் செய்து நாகர்கோவிலுக்கு காலை 9:30 மணிக்கு வந்து சேருமாறும் இயக்கி அதன் வழித்தடத்தை மாற்றி கரூர், நாமக்கல், சேலம் வழியாக தினசரி ரயிலாக இயக்கப்பட வேண்டும்.
மங்களூர்-நாகர்கோவில் பரசுராம் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக காலை 5 மணிக்கு மேல் நாகர்கோவிலில் இருந்து புறப்படச் செய்து இரணியல், குழித்துறை, பாறசாலை ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்லத்தக்க வகையில் இயக்க வேண்டும்.
இதை போல் தற்போது இயங்கி வரும் மங்களூர்-நாகர்கோவில் ஏரநாடு ரயில் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்படியாக கால அட்டவணையை மாற்றி பாறசாலை, இரணியல் ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும்.
திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களூர் புறப்படும் திருவனந்தபுரம்- மங்களூர் 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகா மக்களின் வசதிக்காக அனந்தபுரி ரயிலை திருவனந்தபுரத்திலிருந்து மாலை 4:20க்கு பதிலாக மாலை 5:10 மணிக்கு புறப்படச் செய்து ரயிலின் வேகத்தை அதிகரித்து காலை 8:10 மணிக்கு சென்னை சென்றடையுமாறு மாற்றி இயக்க வேண்டும்.
புது டெல்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் திருக்குறள் ரயிலின் கால நேரத்தை குளிர் காலங்களில் புறப்புடும் பயணிகளின் வசதிக்காக காலை 7:30 மணிக்கு புறப்படுமாறு மாற்ற வேண்டும்.
மும்பை-நாகர்கோவில் ரயிலை நாகர்கோவிலுக்கு இரவு 9 மணிக்கு வந்து சேருமாறு இயக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுகிழமை தோறும் சேலம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, வேலூர், அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர ரயிலின் வழித்தடத்தை மாற்றி கரூர், நாமக்கல்,சேலம் வழியாக இயக்கி நேரத்தை மாற்றி காலை 9 மணிக்கு முன் சென்னை சென்ட்ரல் செல்லதக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி-திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications