ஆவணங்கள், பொருட்களுடன் செல்லும் நித்தியானந்தா சீடர்கள் தடுத்து நிறுத்தி சோதனை
பெங்களூர்: முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களுடன் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் பிடதி மடத்திலிருந்து செல்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மடத்திற்குள்ளும் சென்று போலீஸார் தீவிர ரெய்டில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்பவர், நித்தியானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுவர்ணா கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் இதை நித்தியானந்தா மறுத்தார். ஆர்த்தி ராவுக்கு பால்வினை நோய் உள்ளதாகவும், அப்படிப்பட்டவருடன் நான் எப்படி உறவு வைத்துக் கொள்வேன் என்றும் அவர் கேட்டார்.
இந்த நிலையில் பிடதிக்கு வந்த நித்தியானந்தா அங்கு செய்தியாளர்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார்.இதில் சிலர்கலந்து கொண்டனர். அவர்களில் சுவர்ணா டிவி சேனல் நிருபரும் ஒருவர். அப்போது ஆர்த்தி ராவ் தொடர்பான கேள்விகளை அவர் கேட்க, கோபமடைந்த நித்தியானந்தா அந்த நிருபரை வெளியேற்றுமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சுவர்ணா டிவி நிருபரை பிடித்து வெளியே தள்ளியதாக தெரிகிறது.
கன்னட டிவி நிருபரை நித்தியானந்தா ஆட்கள் தாக்கியதால் கன்னடஅமைப்புள் கொதித்தன. போராட்டங்களில் குதித்தன. இதையடுத்து நித்தியானந்தா தப்பி ஓடி விட்டார். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 7 பேரை பிடித்து கைது செய்தனர். நித்தியானந்தாவையும் கைது செய் வாரண்ட் பிறப்பிக்குமாறு முதல்வர் சதானந்த கெளடா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமம் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த ஆசிரமத்தில் இன்று காலை போலீஸார் ரெய்டு நடத்தினர். ஆசிரமத்திலிருந்தவர்கள் படிப்படியாக வெளியேறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் சிலர் மட்டுமே அங்குள்ளனர்.
இதற்கிடையே, ஆசிரமத்திலிருந்து சிலமுக்கிய ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள்,விலை உயர்ந்த பொருட்களுடன் செல்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஆசிரம வாயில்களில் போலீஸார் தீவிரகண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நித்தியானந்தா ஆதரவாளர்களை தீவிரமாக சோதனையிட்ட பின்னரே வெளியே விடுகின்றனர்.
வழக்கமாக காவி மற்றும் வெள்ளை நிற யூனிபார்மில் காணப்படும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் தற்போது அவற்றை தூக்கிப் போட்டு விட்டு டிசர்ட், ஜீன்ஸ்,பேண்ட் என சாதாரண டிரஸ்ஸில் வெளியேறி வருகின்றனராம். நித்தியானந்தா மட உடுப்பில் வெளியே போனால் தாக்கப்படலாம் என்ற பீதியே இதற்குக் காரணம்.












Click it and Unblock the Notifications